மார்த்தாண்டம், ஏப். 27 –
மார்த்தாண்டம் அருகே கீழ்பம்மம் தெற்கு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் ஓமன் நாட்டில் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவகலா (47). மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் அலெக்ஸாண்டர் மகன் ஜோய் அலெக்ஸ் (57). இவரது மனைவி மெர்சி (58). தம்பதியின் மகன் சோனி.
அலெக்சாண்டர் மற்றும் மெர்சி தம்பதிக்கும், சிவகலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகலாவிடம் ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு ஜோய் அலெக்ஸ் மற்றும் மெர்சி ஆகியோர் தங்களுக்கு வங்கியில் உள்ள கடனை தீர்க்க சிவகலாவிடம் பணம் மற்றும் நகைகளை கடனாக கேட்டுள்ளனர்.
சிவகலா 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்ததாகவும் பல ஆண்டுகள் கடந்த பின்பும் அவற்றை திருப்பி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஜோய் அலக்சுக்கு சொந்தமான சொத்தை விற்று பணத்தை தரலாம் எனக் கூறிவிட்டு, சிவகலாவுக்கு தெரியாமல் சொத்தை விற்றதை கேள்விபட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த சிவகலா, ஜோய் அலெக்சின் காலில் விழுந்து கதறிய நிகழ்வும் நடந்தது.
எனினும் பணத்தை கொடுக்காததால் சிவகலா, ஜோய் அலெக்ஸ் அவரது மனைவி மெர்சி மற்றும் மகன் சோனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இசக்கி மகேஸ்குமார், குற்றம் சாட்டப்பட்ட ஜோய் அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி மெர்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதவும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த வழக்கிலிருந்து ஜோய் அலெக்சின் மகன் சோனி விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் தொழிலதிபர் மற்றும் மனைவிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



