மயிலாடுதுறை, செப்டம்பர் 29 –
மயிலாடுதுறை டி பி டி ஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மயிலாடுதுறையின் சோழம்பேட்டை கிராமத்தில் சனிக்கிழமை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முகாமின் இரண்டாம் நாள் நேற்று நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக பேரணி நடைப்பெற்றது. பேரணியை மயிலாடுதுறை காவல்துறை மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் முருகவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
பேரணியின் துவக்க நிகழ்ச்சியில் மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் மற்றும் சமூக சேவகர் அப்பர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியானது மூவலூர் சாலையில் தொடங்கி சோழம்பேட்டை அண்ணா சிலை அருகே சிறப்பாக முடிவடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் நாட்டு நலப் பணி திட்ட தொடர்பு அலுவலர் முத்துகுமரசாமி மற்றும் டி பி டி ஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்று சிறப்பித்தனர். திட்ட அலுவலர் நாராயணன் நன்றி கூறினார்.



