மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா 57சேத்தூர் ஊராட்சியில் நடப்பாண்டு சுமார் 1000 ஏக்கரில் சம்பா தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக செய்து வந்த தொடர் கனமழை காரணமாக சேத்தூர், உக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா தாளடி பயிர்கள் சுமார் 750 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி குளம் போல் உள்ளது. மேலும் இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் ஆண்டுதோறும் இது போன்ற மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஏக்கருக்கு 25 ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை செலவு செய்தாலும் பாதிப்புக்கான நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த ஆண்டாவது உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்க செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



