போச்சம்பள்ளி, ஜூன் 16 –
தமிழக மாங்காய்களுக்கு ஆந்திரா, கர்நாடக மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் போச்சம்பள்ளியில் விலையின்றி சாலையோரம் மாங்காய்களை விவசாயிகள் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரி டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பித்தர் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். நிகழாண்டில் நோய் தாக்கம், விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் மாங்காய்களைப் பறித்து சாலையோரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து மா விவசாயிகள் சங்கத் தலைவர் சிவகுரு கூறுகையில், ‘மாங்காய்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய 2 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. தற்போது தோத்தபுரி ரக மாங்காய்கள் மண்டிகளில் கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை கொள்முதல் செய்கிறார்கள். இதனால் அறுவடைக் கூலி கூட கிடைப்பதில்லை. ஆந்திர மாநிலத்தில் மா விவசாயிகளைக் காக்கும் வகையில் மாவிற்கு கொள்முதல் விலை ரூ.12 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மாங்காய் கொள்முதல் செய்தால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தடை விதித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார். போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்காய்களைப் பறித்து மூட்டைகளாகக் கட்டி டூவீலர் மற்றும் டெம்போ மூலம் கொண்டு வருகிறார்கள். ஆனால் வியாபாரிகள் கேட்பதற்கு கூட முன் வராததால் சில விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதன் காரணமாக போச்சம்பள்ளி வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே மாங்காய்கள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாங்காயை சாலையோரம் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.