ஈரோடு, மே 25 –
ஈரோடு பவானி ரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் கைத்தறித்துறை அமைச்சர் விஜய பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளி சீருடைக்காக மொத்தம் ஒரு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சம் மீட்டர் துணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 30 லட்சம் மீட்டர் துணி வரப் பெற்று ஒரு கோடியே 10 லட்சம் மீட்டர் துணி சீருடைகளாக மாற்றி பள்ளி கல்வித்துறைக்கு 4 கட்டங்களாக அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள துணிகளை சீருடையாக உற்பத்தி செய்யும் பணி இந்த மாதம் இறுதியில் நிறைவு பெறும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கும் விலையில்லா வேட்டி சேலைகள் உற்பத்தி திட்டத்திற்கான அரசாணை முதல்-அமைச்சர் விஜய்யிடம் ஒப்புதல் பெற்று மிக விரைவில் வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு வேட்டி சேலை உற்பத்தியில் நிகழ்ந்த தவறுகள் இந்தமுறை நடைபெறாது. இந்த ஆண்டு தரமான வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கான இலவச மின்சார உயர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல் அமைச்சர் விஜய் ஆலோசனை செய்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஆனந்த் மோகன் எம்.எல்.ஏ, ஆலையின் செயலாட்சியார் சிவகுமார், துணை இயக்குனர் சரவணன் மற்றும் மாவட்ட இணை செயலாளர் அக்கிம், மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் தளபதி முருகேசன், தொண்டர் அணி அமைப்பாளர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.



