நாகர்கோவில், அக்டோபர் 14 –
நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று இரவு போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது கார் மோதி 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
நாகர்கோவில் அடுத்த வெள்ளமடம் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று இரவு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் எஸ்.பி. உத்தரவின் பேரில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அதே ரோட்டில் குளச்சலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் வேகமாக சென்று போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் போலீஸ் ரோந்து வாகனம் தூக்கி வீசப்பட்டு ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைக் குப்புற கவிழ்ந்தது.
இதில் போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் (58), ஆயுதப்படை போலீஸ்காரர் சுபாஷ் (36), ஏட்டு செல்வகுமார் (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதிய காரின் முன் பகுதியும் சேதமடைந்தது. அதில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஆழ்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த போலீசார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீஸ் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இன்று காலை கிரேன் மூலம் அந்த வாகனத்தை மீட்டனர். இந்த விபத்து சம்பவத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



