விளாத்திகுளம், ஜூன் 08 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், புதூர் பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசைகண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில்: தற்போதைய தமிழக அரசு அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி முழுமையாக விவசாயிகளுக்கு பொருந்தாதவாக்குறுதியாக தான் இருக்கிறது, கடந்த அரசாவது சிறு, குறுவிவசாயி, பெரு விவசாயி என பிரித்தார்கள், ஆனால் தற்போது வந்துள்ள அரசு, சிறு,குறு விவசாயிகளையும் இரண்டாக பிரித்துள்ளனர், இது எந்த விதத்திலும் விவசாயிகளுக்கு லாபம் என்பதை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
எந்த ஒரு விவசாயியும் ஒரு லட்ச ரூபாய்க்கு கீழாக பயிர் கடன் வாங்கவில்லை, ஆனால் தற்போதைய அரசு ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே இருந்தால் 5000 மட்டும் தள்ளுபடி என்கின்றனர், இந்தத் தள்ளுபடி எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.
2025-2026 நிதியாண்டில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பின், மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து 2025-2026 நிதியாண்டு போதுமான மழை இல்லாத காரணத்தினால் வறட்சியான சூழ்நிலையை உள்ளது என்பதை ஆய்வு அறிக்கையை தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த அறிக்கை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதும் தெரியவில்லை, தற்போது வந்துள்ள புதிய மாவட்ட ஆட்சியர் இனிமேல் நான் வந்து ஆய்வு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் உளுந்து, பாசி,மல்லி,மிளகாய்,மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் வியாபாரியிடம் அடிமட்டத்திற்கு விவசாயப் பொருட்களை கொடுக்கும் நிலை வருடம் வருடம் ஏற்பட்டு வருகிறது. மிளகாய்க்கு ஒரு குவிண்டலுக்கு 20,000 முதல் 25,000 வரையும், மக்காச்சோளத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் அரசு நிர்ணயிக்க வேண்டும் எனவும், அதேபோல் நடப்பாண்டில் உள்ள விவசாய கடன் மற்றும் விவசாயத்திற்கான காப்பீடு, இழப்பீடு தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பயிர்கள் வருடம் வருடம் பாதிப்படைந்து வருகிறோம். எனவே விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் 15 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால், மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என விவசாயிகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.



