தஞ்சாவூா், ஜூன் 4 –
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் ஜெய்னுதீன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் முகமது இப்ராஹிம் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து மாநில பொருளாளர் கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன. மேலும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் பயிர், நகைக் கடன் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களில் உள்ள பாசன, ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும், திருவையாறு, பாபநாசம் பகுதியில் வாழை ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்க வேண்டும், உர விலையை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அய்யம்பேட்டை நகர தலைவர் ஜெய்லாலுதீன், அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் தாவூத், அரியலூர் ஒன்றிய செயலாளர் தனஞ்செயன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார்.



