தக்கலை, டிச. 27 –
தக்கலை அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை ராஜ். ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மகன் அகில் ராஜ் (23). இவர் பள்ளியாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது பைக்கில் அகில்ராஜ் சென்றுள்ளார். அப்போது விலாங்காலை என்ற பகுதியில் வைத்து பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடி அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது அகில்ராஜ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



