நாகர்கோவில், பிப். 6 –
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு நிர்வாக காரணங்களால் திட்டமிட்டபடி ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த இயலாது என்பதால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஜனவரி மாதத்திற்கான கூட்டத்தையாவது நடத்தினால் மட்டுமே கும்பபூ சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்கான நெல்கொள்முதல் நிலையம் திறப்பது, மே மாதம் சானல்கள் தூர்வாரப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் விவசாயத்திற்காக அணைகளை திறப்பது, கன்னிப்பூ சாகுபடியை ஆரம்பிப்பது வரையிலான பிரச்சனைகளை விவாதிக்கவும், விவசாயிகளின் பிரச்சனையை தேர்தலுக்கு முன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும் என்பதை மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாய பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக பிப்ரவரி 11ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்துவதாக மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


