தேனி, மே 16 –
தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் (15.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த 12.05.2026 வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டு, வருகின்ற 19.05.2026 வரை நடைபெறவுள்ளது.
மேலும், இத்திருவிழாவில் பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டுச் செல்லும் வரை பாதுகாப்புப் பணியில் ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாதவண்ணம் உள்ளே சென்று, வெளியே வருவதற்கு தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பக்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, ஒலி பெருக்கியின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் விழாவினை நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாரம்பரிய உடை அணிந்து துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஐங்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், பேரூராட்சித்தலைவர்கள் கீதாசசி (வீரபாண்டி), மிதுன்சக்கரவர்த்தி (பழனிசெட்டிபட்டி), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், உதவி ஆணையர் (இந்துசமய அறநிலையத்துறை) ஜெயதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், வட்டாட்சியர் (தேனி) சதீஸ்குமார், செயல் அலுவலர்கள் இளங்கோவன், சுபிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



