புதுக்கடை, ஜூலை 11 –
புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படாத மின் தடை நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கடையில் உயர் அழத்த மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதுக்கடை, கீழ்குளம் பேரூராட்சிகள், முஞ்சிறை, விளாத்துறை, பைங்குளம், இனயம்புத்தன்துறை ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு சுகாதாரத்துறை ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மேலும் பல்வேறு தொழிற் கூட்டங்களும் அமைந்துள்ளன.
புதுக்கடை பகுதி மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு கடந்த சில வருடங்களாக புதுக்கடை மின்வாரியத்தில் பெரும் குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டு மின்தடைகள் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும், அவர்கள் கண்டு கொள்வது இல்லை.
குறிப்பாக திடீரென மின்தடை ஏற்படும் நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் புகார் அளித்தால், சுமார் ஒரு நாள் வரை தாண்டி அதை சீரமைப்பதாக ஏற்கனவே புகார்கள் இருந்து வருகிறது. மின் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை வந்து கண்டு கொள்வதில்லை. இது புதுக்கடை மின்வாரியத்தில் தொடர்ந்து நடைபெறும் செயல் ஆகும்.
இந்த நிலையில் தற்போது கடந்த ஒரு மாத காலமாக புதுக்கடை மின்வாரிய அலுவலக பகுதிகளில் பகல், இரவு வேளை என தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. சுமார் 15 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை இந்த மின்தடை அடிக்கடி செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்கூடங்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்தடை ஏற்படும் நேரங்களில் புதுக்கடை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள தரைவழி இணைப்பு போன் நம்பரை தொடர்பு கொண்டால் அது நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட ஏரியா பணியாளர்களை கூப்பிட்டால் அவர்கள் நாங்கள் இப்போது புதுக்கடை பகுதியில் இல்லை நாங்கள் வேறு பகுதியில் இருக்கிறோம் என்று சொல்லி தப்பித்து விடுகின்றனர். இதனால் யாரிடம் குறைகளை அறிவிப்பது என்று தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதற்கு மேலாக துணை பொறியாளர் மற்றும் முதன்மை பொறியாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே புதுக்கடை மின்வாரிய பகுதிகளில் நடைபெறும் மின்தடை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


