புதுக்கடை, மார்ச் 30 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபி (27). இவர் அந்த பகுதியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காப்புக்காடு தாழவிளைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து ரேஷன் வாங்க வீட்டிலிருந்து பஸ்ஸில் வந்துள்ளார். அவர் ரேஷன் கடை பக்கம் சாலையில் இறங்கி சாலையை கடக்கும் போது, அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சிபியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிபி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவருக்கு முதுகெலும்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பைக் குறித்து விசாரித்து வருகிறார்.


