தென்காசி, மே 28 –
தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழைய குற்றால அருவி, பேரருவி, ஐந்தருவி, சிற்றறிவி, புலி அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் அமைந்துள்ள நிலையில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு ரூ.20 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற கோரி குளிக்கும் போராட்டத்தை நடத்தினர். அப்போது பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற கோரியும் செண்பகாதேவி அருவி அருகே அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை தரிசிப்பதற்கு தடை விதிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நூதன போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி தலைமை வகித்தார். வட்டார குழு செயலாளர் பட்டாபிராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அயூப்கான், வேலுமயில், தங்கம், குணசீலன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், லெனின் குமார், தர்ம கனி, ஆயிஷா, விவசாயிகள் சங்கம் டேனி அருள்சிங், சுப்பிரமணியன், பிரபாகரன், சூர்யா, இசக்கிமுத்து, வட்டார குழு உறுப்பினர்கள் குருசாமி, ஐயப்பன், ராம மூர்த்தி, ராஜகோபால் கற்பகவள்ளி, அய்யாதுரை, சேக்முகமது, தானு மூர்த்தி, கிளைச் செயலாளர்கள் கருப்பசாமி, ராமசாமி, சண்முக வாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



