நாகர்கோவில், ஆக. 3 –
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்களை ஏற்படுத்தி செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல ஏதுவாக பள்ளி கல்வி இயக்ககத்தின் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கென வட்டார அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களில் இருந்து உயர் தொழில் நுட்ப ஆய்வக வசதி உள்ள 236 வட்டாரங்களில் உயர் கல்வி வழிகாட்டு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இம்மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்திற்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கவும், கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியர்களின் மூலமாக அப்பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களும், வட்டார அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டு போட்டி தேர்வுகளுக்காக தங்களை தயார் படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஜெஇஇ, மருத்துவம் சார்ந்த படிப்புகள், வணிகவியல் மாணவர்களுக்காக கியூட் தேர்வு ஆகியவற்றிற்கு மாதிரி பள்ளிகளின் ஒருங்கிணைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து வட்டார முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார மைய பள்ளிகளில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதம் ஆகிய முதுகலை பாட ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இப்ப பயிற்சிகள் தங்குத் தடை இன்றி நடைபெற ஏதுவாக சார்ந்த வட்டாரத்தில் உள்ள மையப்பள்ளி தலைமை ஆசிரியர், மைய பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வாரமும் பணிபுரிவதை உறுதி செய்திட தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.