நாகர்கோவில், பிப். 2 –
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் உள்ள அனந்தகிருஷ்ணருக்கு தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை பெரும் திருவிழா கடந்த 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாளான நேற்று காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேர் முழுவதும் புதிய தேர் பட்டால் அலங்கரிக்கப்பட்டு, நாகராஜா கோவிலில் இருந்து அனந்தகிருஷ்ணர், பாமா, ருக்மணி உடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரடி இசக்கியம னுக்கு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து தேரில் அனந்தகிருஷ்ணர் பாமா ருக்மணிக்கு தீபாரதனை காட்டப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்தை தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அறநிலையதுறை இணை ஆணையர் ஜான்சி ராணி, கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று 2ம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஆராட்டு, இரவு 7:15 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டு துறையிலிருந்து சுவாமி வெள்ளி நாகராஜா வாகனத்தில் எழுந்தருளல், தொடர்ந்து ஆறாட்டு துறையிலிருந்து கொம்மண்டை அம்மன் கோயிலுக்கு எழுந்தருளால், இரவு 10 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.



