ஈரோடு, ஜூலை 10 –
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் அவர்களின் அறிவிப்பின்படி மண்டலம்-3, பத்தாவது வார்டுக்கு உட்பட்ட சன் கார்டன், சிவபுரம், வில்லரசம்பட்டி, போயஸ் கார்டன், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் “SAFAI APNA BIMAARI BHAGAO” (தூய்மையை கடைப்பிடிப்போம் நோய்களை விரட்டியடிப்போம்) திட்டத்தின் கீழ் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த முகாமில், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் முழுமையாகச் சேகரிக்கப்பட்டதுடன், பொதுக் கழிப்பறைகளும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களால் பரவக்கூடிய தொற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில், ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமரவேல், சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



