நாகர்கோவில், ஜூலை 13 –
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் மகளிர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை, சென்னை, சேலம் மற்றும் நமது மாவட்டத்திற்குட்பட்ட அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக மகளிர் விளையாட்டு வீராங்கனைகள் விடுதியை கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: விளையாட்டு வீராங்கனைகளுக்கு உடல் வலிமையும், ஆரோக்கியமும் மிக முக்கியம். எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுத்தமான முறையிலும் சமைக்கப்பட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. வீராங்கனைகளின் பயிற்சிக்குத் தேவையான அனைத்து கூடுதல் வசதிகளும், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையமும் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறையின் வாயிலாக உடனுக்குடன் செய்து தரப்படும். விடுதியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என கேட்டறியப்பட்டது.
மேலும் விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். படித்தால் மட்டும் தான் விளையாட்டு துறையின் இடஓதுக்கீட்டில் நீங்கள் சாதிக்க முடியும். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய போட்டிகள் மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, விடுதி காப்பாளர்கள், பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



