நாகர்கோவில், செப்டம்பர் 27 –
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் ஒழுகினசேரி பகுதியில் 18 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிவந்தனர். மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவிலில் நேற்று முன் தினம் ஓட்டுனர் உரிமம் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2 கார்கள், ஒரு டெம்போ, நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக மொத்தம் ரூ.89 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.


