நாகர்கோவில், மார்ச் 23 –
நாகர்கோவில், வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் தாமஸ் ராஜப்பன் இவருடைய மனைவி ஜெய சாந்தினி (60). தாமஸ் ராஜப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் ஜெய சாந்தினி, அவரது வயதான தந்தை மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெயசாந்தினி மகள் சினேகா கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மகளை மருத்துவமனையில் இருந்து ஜெய சாந்தினி கவனித்து வந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து தந்தையை பார்த்துக் கொள்வதற்காக வீட்டின் வேலை பார்த்து வரும் வடசேரியை சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி வசந்தி (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுகுணா ஆகியவரிடம் சாவியை கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் தனது மகளின் பெயரில் ஒரு நிலம் வாங்க ஜெயசாந்தினி முடிவு செய்தார். இதற்காக வீட்டிலிருந்த நகையை விற்க எண்ணி பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த 137 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
இது குறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் ஜெய சாந்தினி புகார் அளித்தார். அந்த புகாரில் வேலையாட்கள் சசிக்குமார், வசந்தி மற்றும் சுகுணா ஆகியோர் சேர்ந்துதான் நகைகளை திருடியிருக்கலாம் என கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மேற்கண்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 பேரையும் பிடித்து விசாரித்த போலீசார் அவர்களின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் இவர்களின் செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு, அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.


