நாகர்கோவில், ஜூன் 8 –
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் கடலோர மீனவ கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் ஆகியோர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,43,388 மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், முட்டம் (தனியார்) என மொத்தம் 4 மீன்பிடித்துறைமுகங்களும், 9 மீன் இறங்கு தளங்களும் உள்ளன. மேலும் 119 மீன்வள கூட்டுறவு சங்கங்களும், 40 மீன்வள கூட்டுறவு நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், புதிய உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டாத விசைப்படகுகளை பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடலில் காணமால் போகும் மீனவர்கள் மற்றும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடனடியாக அவர்கள் கரைக்கு திரும்புவதற்கு ஏதுவாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
மேலும் கடல் சீற்றங்களினால் பாதிக்கப்படும் கடலோர மீனவ கிராமங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடல் சீற்றங்களால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உடனடியாக உதவுவதற்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தொகையினை விடுவித்து வழங்க வேண்டும்.
தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மணக்குடி மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மீனவக்குடும்பத்திற்கு சென்றடைவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மீனவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மரு.விஜய கார்திகேயன், விஜய் வசந்த், எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



