தக்கலை, செப். 20 –
பத்மநாபபுரம் அரண்மனையில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் நிர்வாக காரணத்திற்காக 1840 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி விக்ரங்கள் யானை, வெள்ளி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பின்னர் அங்கு 10 நாட்கள் நவராத்திரி விழா பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 23ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு தக்கலை பத்மநாபபுரம் வந்தடைந்தது. அது போன்று குமாரகோவில் முருகன், தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் விக்கிரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தடைந்தது.
தொடர்ந்து 2வது நாள் நிகழ்ச்சியாக இன்று பத்மநாபபுரம் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி மன்னர் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதழ் தமிழக கேரள மாநில போலீசார் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மன்னரின் உடைவாளை கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தமிழக இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் ஜான்சிராணி இடம் ஒப்படைத்தார். அவர் அதனை பெற்று அரண்மனை ஊழியர் மோகனகுமாரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பல்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், விஜய் வசந்த் எம்பி, கேரளா எம்எல்ஏக்கள் ஹரேந்திரன் (பாறசாலை), வின்சென்ட் (கோவளம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதை உடன் சுவாமி விக்கிரகங்கள் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஊர்வலம் இன்று இரவு குழித்துறை சென்று அங்கு தங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு இருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடைகிறது. 22 ஆம் தேதி காலையில் நெய்யாற்றின் கரையில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டு அன்று இரவே திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை சென்றடையும். அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கள் நடக்கிறது.



