கன்னியாகுமரி, மார்ச் 27 –
கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி மங்களம் (56). இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி ராஜலட்சுமி (65) என்பவரும் தினமும் மாலை நடைபயிற்சி செல்வது வழக்கம்.
நேற்று மாலை வழக்கம்போல் மகாதானபுரம் அக்ரகாரம் தெருவில் இருந்து நரிக்குளம் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர்களின் பின்னால் வந்து திடீரென நிறுத்தியதும் பின் இருக்கையில் இருந்து 2 நபர்கள் இறங்கி வந்தனர். அவர்களில் ஒருவர் மங்களத்தின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்தார். மற்றொருவர் ராஜலட்சுமி கழுத்தில் தங்கச் சங்கிலியை பறித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கூச்சலிட்டனர்.
நகையை பறித்த இருவரும் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை மங்களத்தின் கழுத்தில் கிடந்த 2 தங்க சங்கிலிகள் 7 பவுன் எடை கொண்டதும், ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த சங்கிலி 1 1/2 பவுன் எடை கொண்டது ஆகும். இது குறித்து மங்களம் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களையும், காரையும், போலீசார் தேடி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


