இரணியல், ஆக.23:
நாகர்கோவில்–திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தோட்டியோடு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாகவும், நீண்ட வரிசையிலும் சென்று வருகின்றன. போக்குவரத்தை குளச்சல் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அந்த வழியாக டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சொகுசு கார் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சொகுசு காரின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது. விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து லாரி ஓட்டுநரை கீழே இறங்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் பயந்துபோன லாரி ஓட்டுநர், தன்னை பொதுமக்கள் தாக்கிவிடுவார்கள் என நினைத்து லாரியின் ஜன்னல் வழியாக வெளியேறி அருகில் இருந்த குளத்தில் குதித்தார். பின்னர் குளத்தில் நீந்தி மறுகரைக்கு சென்று தப்பிச் செல்ல முயன்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறுகரைக்கு சென்ற ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் (46) என்பது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய லாரி மற்றும் சொகுசு கார் சாலையில் நின்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு வாகனங்களையும் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



