ராமநாதபுரம், டிச. 17 –
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டி பேரூராட்சி மன்றத் தலைவராக ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் பொறுப்பு வைக்கிறார். ஆனால் பேரூராட்சி மன்ற நிர்வாகங்களில் மன்ற தலைவரின் மகன் நவ்ஃபுல் ஆதம் தலையீடு அதிகமாக இருந்து வருகிறது. இவரது தலையீடு தொடர்வதால் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஊழல் அதிகரித்து மக்கள் நலத்திட்டங்களை செய்வதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தொண்டி பேரூராட்சியில் தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலி கான் பொறுப்பேற்றதில் இருந்து அவரது மகன் தலையீடு அதிகரித்து பணிகள் அவரது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது என்பது தொண்டி பேரூராட்சியின் பொதுமக்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பேரூராட்சிகளின் முக்கிய பணிகளான வாறுகால் சீரமைப்பு, தெரு சாலைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்தில் பெரிய குளறுபடிகள் இருந்து வருகிறது. இதனால் மக்கள் தொண்டி பேரூராட்சி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். சில வார்டுகளில் வாறுகாலுக்கு என பெருந்தொகை அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் வாறுகால் பணிகள் முழுமை அடையாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
குடிநீர் இணைப்பிற்கு அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் தொகையை வசூலிக்கின்றார்கள். பெருவாரியான புதிய குடிநீர் இணைப்பிற்கு கொடுக்கப்பட்ட தொகைக்கு முறையான ரசீதுகள் வழங்கப்படாதது, அதிக அளவிலான முறைகேடுகள் நடந்து வருகிறது. தற்காலிக தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் பெரிய அளவில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகிறது. 2022-2023 ஆம் நிதி ஆண்டில் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவு விவரங்கள் மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட செலவு சீட்டுகளின் எண்ணிக்கை 897 எனவும் உள்ளாட்சி நிதி தணிக்கைக்கு அனுப்பப்பட்ட செலவு சீட்டுகளின் எண்ணிக்கை 1397 எனவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தொண்டி பேரூராட்சி நிர்வாகம் தந்துள்ளது. இது மிகப்பெரிய ஒரு முறைகேடு.
மேலும் 2023 -24 ஆம் தேதி நிதியாண்டில் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவு விவரங்கள் மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட செலவு சீட்டுகளின் எண்ணிக்கை 963 எனவும் உள்ளாட்சி நிதி தணிக்கைக்கு அனுப்பப்பட்ட செலவு சீட்டுகளின் எண்ணிக்கை 1885 எனவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தொண்டி பேரூராட்சி நிர்வாகம் தகவல் தந்துள்ளது. மக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தும் பேரூராட்சி நிர்வாகம் உறுதுணையா இருப்பவர்கள் மீது நடவடிக்கை கோரியும் தாழ்த்தப்பட்டோருக்கான ஈமச்சடங்கு தொகையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கின்றன.
மேலும் தொண்டி பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலைகளுக்கு என அரசு ஒதுக்கீடு செய்த 1.8 கோடி ஒப்பந்த முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தொண்டியில் இந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பாக அனைத்து மக்களின் சார்பாக கடந்த 29 .12 .2025 அன்று பேரூராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. ஊழல் சம்பந்தமான சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த புகார் மூலம் தமிழக முதல்வர் அவர்களுக்கு தொண்டியை ஐக்கிய ஜமாத் மற்றும் (அரசியல் சார்பற்ற) இந்து மத தர்ம பரிபாலன சபை சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு அளித்திருக்கின்றோம்.
மேலும் அரசுக்கு தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகள் தெரியும் விதமாக ஜனநாயக ரீதியான போராட்டங்கள் முன்னெடுத்தும் செயல் அலுவலர் உள்ளிட்டு அரசு அதிகாரிகள் பாரா முகமாக இருக்கிறார்கள் எனவே தமிழக முதல்வர் மாவட்ட நிர்வாகம் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொண்டியில் தொண்டி ஐக்கிய ஜமாத் இந்து மத தர்ம பரிபாலன சபை ஒத்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் இணைந்து வருகின்ற 19.1.2026 அன்று மாலை 6 மணி அளவில் தொண்டி பாவொடி மைதானம் அருகே கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்த இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அவர்கள் மனுவில் கூறி உள்ளனர்.



