புதுக்கடை, ஜூலை 11 –
புதுக்கடை அருகே உள்ள தும்பாலி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அங்குள்ள பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் என்பவர் தலைமையிலான போலீசார் நேற்று அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குதிரைவட்டம் பகுதியில் மரிய அற்புதம் என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை 5 பண்டில்கள் மற்றும் 15 கிராம் எடை உள்ள 15 பாக்கெட் என மொத்தம் 1 கிலோ 350 கிராம் எடைஉள்ள புகையிலை பொருள்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதையடுத்து பெட்டிக்கடை நடத்திய மரிய அற்புதம் (82) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


