ஈரோடு, மார்ச் 18 –
பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் “வாக்களிப்பு என்பது நம் ஜனநாயகத்தின் அடித்தளம். ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்டது.
ஒரு வாக்கு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். வாக்கு செலுத்துவது நம் உரிமை மட்டுமல்ல, அது நம் கடமையும் ஆகும்.” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்று வழியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இப்பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கல்லுாரி மாணவ, மாணவியர்களுடன் நடத்து சென்று வழியெங்கும் தேர்தல் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, அதிநவீன மின்னணு வாகனம் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிப்பரப்பும் வீடியோ விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார். இவ்வாகனமானது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளது. தொடர்ந்து, வீரப்பன்சத்திரம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருக்குமரன், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கலைமாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



