தேனி, மே 25 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (25.05.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 355 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.1,12,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை 20 சிறுபான்மையினர் மகளிர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, தனித்துணை ஆட்சியர் கவிதா, உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



