நாகர்கோவில், நவ. 3 –
குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளை பெருமைபடுத்தும் வகையில் அரசு உத்தரவுக்கு இணங்க நவம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறை நாள் என ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறை நாள் என அரசு அறிவிக்கவில்லை. சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் இந்த நாளின் முக்கியத்துவத்தை கூறி விடுமுறை விடப்பட்டதை பொதுமக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்குரிய விடுமுறை அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைப்பதற்கு மார்ஷல் நேசமணி அவர்களுடைய தலைமையில் 1947-ம் ஆண்டு முதல் 1956 வரை தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பயனாக 1956 நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்தது. இதற்கான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வெற்றி பெற்றமைக்காக மார்ஷல் நேசமணி அவர்களை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமரித் தந்தை என்று அழைத்து பெருமை சேர்த்து வருகிறார்கள்.
இதனடிப்படையில் நேற்றைய தினம் (01-11-2025) குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்து 70-வது பிறந்தநாளை கொண்டாடி தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். இந்நன்னாளை முன்னிட்டு ஆண்டு தோறும் குமரி மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அறிவித்து இந்நாளுக்கு பெருமை சேர்த்து குமரி மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வந்தது.
இந்நிலையில் (01-11-2025) குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்து 70-வது பிறந்த தினத்தை கொண்டாடியது. இந்நாள் மகிழ்ச்சிக்குரிய பொன்னாளாகும். இந்நாளுக்குரிய சிறப்பு அந்தஸ்தான விடுமுறை நாள் அறிவிப்பை அரசும், மாவட்ட நிர்வாகமும் வெளியிடவில்லை. சனிக்கிழமை அரசு விடுமுறையாக இருந்தாலும் கூட இந்நாளுக்குரிய பெருமையை எடுத்து சொல்லும் விதமாக இதற்குரிய விடுமுறை காரணத்தை மக்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். முறையான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை.
விடுமுறையானலும் முறையான அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் இந்நாளின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்திருப்பார்கள். இந்த நாளின் முக்கியத்துவத்தை மாவட்ட நிர்வாகம் மறந்தது ஏன்? மறைத்தது ஏன்? முறையான அறிவிப்பு செய்யாதது ஏன்? இந்த முக்கியமான நாளுக்கு விடுத்த விடுமுறை அறிவிப்பை மக்களுக்கு தெரிவிக்க மறுத்தது ஏன்? மேலும் அன்றைய நாளில் பல்வேறு நூலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கியதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முறையான அறிவிப்பு இருந்திருந்தால் இந்நாளின் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிந்திருக்கும். முறையான விடுமுறை முக்கியத்துவ அறிவிப்பை செய்யாத இந்த செயலுக்கு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



