திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 10 –
திருவெண்ணெய்நல்லுர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கரைமேல் அழகர் கோயில் அருகில் 129 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் விழல் ஏலம் விட்டு அறுவடை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விழல் ஏலத்திற்காக தயாராகி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் விழல் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வந்த முதியவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த ஏரியில் இருந்த விழலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



