திருவெண்ணெய்நல்லூர், ஆக. 18 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் ஊராட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்ட வழங்கல் அலுவலர் கமலவேணி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அரசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தங்கு தடையின்றி மாணவ மாணவிகள் செல்வதற்கு வழிவகை செய்திட வேண்டும், திருவெண்ணெய்நல்லூர் சாலை மற்றும் 2015-ம் ஆண்டு அரசூர் பாரதிநகர் காலனி பகுதிக்கு வந்த கருமகாரிய கொட்டகை ஆகியவற்றை அமைத்து தர வேண்டும், பாரதிநகர் அங்கன்வாடி அருகே மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அரசூர் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தணிக்கை செய்யப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



