திருவாரூர், நவம்பர் 26 –
திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 27 முதல் 30 வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பெய்த கன மழையால்
பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கனமழை பாதிப்பு குறித்து வரும் புகார்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எஸ் ஐ ஆர் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



