குளச்சல், ஜன. 23 –
குளச்சல் எஸ்ஐ தனுஷ் லியோன் மற்றும் போலீசார் பெத்தேல்புரம் பகுதியில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழி விளை என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் பைக்கில் பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார் வாலிபரை பின்தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வாலிபரை விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் செங்குழி விளை பகுதியை சேர்ந்த ஜீசஸ் டார்வின் மகன் அந்தோணி அருள்ராஜ் (25) என்பது தெரிய வந்தது.
இவர் சென்னையில் உள்ள மீன் கடையில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்த அந்தோணி அருள்ராஜ் பின்னர் கஞ்சாவை வாங்கி அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு பைக்கில் சுற்றி திரிந்தது விற்றது தெரியவந்துள்ளது.
இதை அடுத்து அந்தோணி அருள்ராஜை கைது செய்த போலீசார் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வாலிபருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



