திருவள்ளூர், ஆக. 3 –
திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அப்போதைய போக்குவரத்து வசதிக்கு ஏற்ப பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
தற்போது மாவட்ட தலைநகராக இருப்பதாலும் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி இருப்பதாலும் திருவள்ளூர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. பள்ளிகள், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அதிகரிப்பால் நகரில் போக்குவரத்தும் அதிகரித்து விட்டது.
இந்நிலையில் செயல்பட்டு வரும் திரு.வி.க., பேருந்து நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, 2019ம் ஆண்டு திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் 36 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்ததால் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே பேருந்து நிலையத்தை கடந்த மார்ச் 4ம் தேதி அப்போதைய முதல்வர் அவசரம் அவசரமாக காணொளி மூலம் திறந்து வைத்தார்.
ஆனால் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து இம்மாதம் 10ம் தேதி முதல் அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பேருந்துக்களும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என மாவட்ட கலெக்டர் ச.கவிதா தெரிவித்துள்ளார்.



