தருமபுரி, ஆகஸ்ட் 18 –
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயிகளுக்கு (E – KCC) திட்டம் என்று சொல்லக்கூடிய இ-கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாய கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தடங்கம் ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தோட்டக்கலை இயந்திரங்கள் சிறுதானியங்கள் மற்றும் உயர்ம மேலாண்மை கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். வேளாண்மை துறை, வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 1,705 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.
தருமபுரி மாவட்டத்தில் 830 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 70,427 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள், 512 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 362 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் 1073 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். மாவட்டத்தில் உள்ள சித்தேரி ஊராட்சி மற்றும் 63 கிராமங்கள் அரூர் வட்டத்தில் இணைக்கப்படும். ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலை 25 கி.மி தொலைவிற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். நல்லம்பள்ளி மலைச்சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தார்சாலையாக அமைக்கப்படும். நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
புளி உற்பத்தி செய்ய ரூ.11 கோடி மதிப்பீட்டில் புளி வணிக மையம் அமைக்கப்படும். இவ்வாறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வா. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், வேளாண்மை இயக்குனர் பா. முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



