தருமபுரி, ஆகஸ்ட் 26 –
தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளுப் பட்டியில் அரசு தொழில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கப்பட்டு தற்காலிகமாக அங்குள்ள சமுதாயக் கூடத்தில் இந்த அரசு தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் ரூ.25.43 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு காரிமங்கலம் ஒன்றியம் கொள்ளுப் பட்டியில் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொள்ளும் பட்டியில் நடந்த விழாவில் ஆட்சியர் குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் புதிய கட்டிடம் கட்டப்படும் இடத்தினை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், காரியமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், நிர்வாகிகள் அன்பழகன், கண்ண பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



