தருமபுரி, அக்டோபர் 20 –
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக நிருபர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக நிருபர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கு.இராசசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், சேட்டுமாதையன், நவீன் ஜார்ஜ், இர்ஃபான், தர்மராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
நிகழ்ச்சியை பென்னாகரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் மூத்த பத்திரிகையாளர்கள் முரசொலி.மணி, கலைஞர் டிவி வேணுகோபால், ஜெயா டிவி சீனிவாசன், திருமலைவாசன் ஆகியோரை கௌரவித்து விருது மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அதே போல் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றி வரும் செய்தியாளர்கள் புகழேந்தி, சரவணக்குமார், வெற்றிவேல், டி.யூ.ஜே சுரேஷ், சுகுமார், விவேகானந்தன் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் குறித்த கருத்தரங்கத்தை இயக்குனர் சங்கர் துவக்கி வைத்தார். பத்திரிகையாளர்களின் சுதந்திரம் குறித்து தீக்கதிர் மூத்த பத்திரிகையாளர் கண்ணன், பத்திரிக்கையாளர்களின் இன்றைய சவால்கள் குறித்து சன் நியூஸ் முதுநிலை உதவியாசிரியர் சக்தி சூர்யா ஆகியோர் கருத்துரை வழங்கி பேசினர். கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைத்து கொடுத்து அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடங்களில் பணிபுரியும் வட்டார அளவிலான பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் இணைக்க முன்வந்து திட்டம் வகுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும் தமிழக நிருபர்கள் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஆ. ஜீவானந்தம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பென்னாகரம் வட்டார அளவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற 5 ஆசிரியர்களை கௌரவித்தும், சிறந்த முறையில் பள்ளிகளை நடத்திக் கொண்டிருக்கின்ற 6 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 30 பத்திரிகையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசிகள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன், உதவி பொறியாளர் தமிழரசன், திமுக ஒன்றிய செயலாளர்கள் எரியூர் என். செல்வராஜ், மடம்.முருகேசன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி, திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பெருமாள், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர் முத்துமாணிக்கம், சின்னசாமி, நஞ்சப்பன், கார்த்தி, மணி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் தமிழக நிருபர்கள் சங்கத்தின் மண்டல செயலாளர் எஸ். சரவணன் நன்றிவுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை நல்லாசிரியர் கோவிந்தசாமி தொகுத்து வழங்கினார்.



