களியக்காவிளை, பிப். 3 –
கன்னியாகுமரி கோட்டத்திற்குட்பட்ட களியக்காவிளை துணை அஞ்சலகம் நேற்று புது கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய அலுவலகக் கட்டிடத்தை கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜி. செந்தில் குமார் திறந்து வைத்தார். குழித்துறை உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் கண்மணி , களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மேல்புறம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மாஹீன் அபு பக்கர், வார்டு உறுப்பினர் ரஃபாய் மற்றும் கட்டிட உரிமையாளர் முகமது நாதிர் ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜி. செந்தில் குமார் கூறுகையில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், அரசால் ஆதரிக்கப்படும் நேரடி நிதி பரிமாற்ற (DBT) முயற்சிகள் மற்றும் காப்பீட்டு சேவைகள் குறித்து, குறிப்பாக அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் அதன் பல்வேறு அம்சங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் பேசுகையில், உள்ளூர் சமூகத்திற்கு சேவை வழங்குவதில் களியக்காவிளை துணை அஞ்சலகத்தின் முக்கிய பங்கு மற்றும் அதன் விரிவான சேவைகளை வலியுறுத்தினார்.
மேல்புறம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மாஹீன் அபு பக்கர், அரசின் சேவைகளுடன் பொதுமக்களை இணைப்பதில் களியக்காவிளை அஞ்சலகம் செய்துவரும் பங்களிப்பை பாராட்டினார். தொடர்ந்து அஞ்சல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



