மதுரை, ஆகஸ்ட் 15 –
மதுரை மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தலைமை அலுவலக வளாகத்தில் மேலாண் இயக்குனர் வே. சரவணன் நாட்டின் 79-வது தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு மதுரை கோட்டத்தைச் சார்ந்த அதிகபட்ச டீசல் வழங்கிய ஓட்டுநர்கள், அதிக வருமானம் ஈட்டித் தந்த நடத்துநர்கள், நேர்மையாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மண்டலங்களைச் சார்ந்த சிறந்த கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள், ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள், தூய்மை நலப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என மொத்தம் 34 நபர்களுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்.
அதன் பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று கிளை வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் குழந்தைகள் 70 பேருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (தொழில்நுட்பம்- கூட்டாண்மை ) கோபாலகிருஷ்ணன், மதுரை மண்டல பொது மேலாளர் ப. மணி உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



