தஞ்சாவூர், செப்டம்பர் 19 –
தமிழ்நாட்டில் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான மீனாட்சி மருத்துவமனை, பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்க நேரிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் பார்வைத்திறனை காப்பாற்றியிருக்கிறது. இந்த கட்டிகளை அகற்றியதோடு சேர்த்து அழகியல் ரீதியாக பாதிப்பு இல்லாததை உறுதி செய்ய கண்குழி சுவர்களையும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவினர் சிறப்பாக கையாண்டுள்ளனர்.
மேலும் இது குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் அருண் குமார் கூறியதாவது: மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30 வயதான ஒரு விவசாயிக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சோதனையில் கண் குழிக்கு உள்ளே 3x2x3 அளவுள்ள ஒரு கட்டி மூளைக்குள் நீண்டிருப்பது கண்டறியப்பட்டது. கண் குழியின் உட்புற தசைப்பகுதிக்குள், கண் அசைவை கட்டுப்படுத்துகின்ற தசைகளால் சூழப்பட்ட ஒரு இடத்தில் அக்கட்டி அமைந்திருந்தது.
இன்ட்ராகோனல் டெர்மாய்டு என அழைக்கப்படுகின்ற இப்பாதிப்பு மிகவும் அரிதானதாகும்; உலகளவில் இதுவரை சுமார் 40 நபர்களுக்கு மட்டுமே இப்பாதிப்பு இருந்ததாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது நோயாளியான 40 வயதான ஒரு விவசாயிக்கு வலது கண்ணில் 11x7x6 செ.மீ. என்ற அளவுள்ள ஒரு பெரிய கட்டி இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. எக்ஸ்ட்ராகோனல் எபிடெர்மாய்டு என அழைக்கப்படும் இப்பாதிப்பு நிலையில் அக்கட்டி, மூளை மற்றும் மண்டையோட்டின் அடிப்பகுதி வரை நீண்டிருந்தது. உலகளவில், இதுநாள் வரை இதே போன்ற 60 நேர்வுகள் மட்டுமே அறியப்பட்டிருக்கின்றன.
கண்குழியின் தசைக்குள் 3×2 செ.மீ. அளவுள்ள இன்ட்ராகோனல் டெர்மாய்டு கட்டியை அகற்ற, ரூஃப் ஆர்ட்டிபிட்டோடோமி மற்றும் கண்ணில் தசைக்கூம்பிற்கு வெளியே 11x7x6 செ.மீ அளவுள்ள எக்ஸ்ட்ராகோனல் எபிடெர்மாய்டு என்ற புதுமையான நரம்பியல் அறுவை சிகிச்சை அணுகுமுறைகளைப் பயன்படுத்திய அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழு, இந்த இரு நோயாளிகளிடமிருந்து இரு கட்டிகளையும் வெற்றிகரமாக அகற்றியிருக்கிறது. இந்த சிக்கலான மிகவும் சவாலான அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு மூளையின் முக்கிய பகுதிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மீனாட்சி மருத்துவமனயின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். V. பிரவீன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஜி. அரிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.


