தஞ்சாவூர், செப். 1 –
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டி மாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். நிகழாண்டு விழா சனிக்கிழமை (ஆக. 30) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக பூண்டிமாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இறை பாடல்களுடன் சுமந்து வந்தனர். மாதாவின் படம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பக்தர்கள் முன் செல்ல, பேண்டு வாத்தியங்கள் முழங்க, பங்கு தந்தையர்கள் ஊர்வலமாக வந்து பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தனர். கும்பகோணம் மறைமாவட்ட மேதகு மேனாள் ஆயர் எப். அந்தோனிசாமி கொடியை புனிதப்படுத்தி கொடி மரத்தில் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
அவருடன் சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பன் அருள் செல்வன் உடன் இருந்தார். கூடியிருந்த மக்கள் “மாதாவே வாழ்க, பூண்டி அன்னையே வாழ்க” என்று கோஷமிட்டனர். வானவேடிக்கை, அதிர்வேட்டுகள் முழங்கின. பின்னர் திருப்பலி பூசை நடத்தி மறையுரை ஆற்றி அருளாசி வழங்கினார். இதில் மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ். இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ. சாம்சன், துணை அதிபர் ஜெ. ரூபன் அந்தோனிராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் ஆல்பர்ட் சேவியர், உதவித்தந்தைகள் எஸ். அருள் லாரன்ஸ், எம். செல்வகுமார், ஆன்மீகத்தந்தை பி. ஜோசப், சுற்றுவட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்தனர். 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு பங்கு தந்தையர்கள் நடத்தி வைக்கின்றனர். செப். 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அன்னையின் பிறப்புப் பெருவிழா திருப்பலி நிறைவேற்றி அருளாசி வழங்குகிறார்.
அன்று இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பூண்டி மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர் பவனியை புனிதப்படுத்தி துவக்கி வைக்கிறார். 9ம் தேதி குருமார்கள் திருவிழா கூட்டு திருப்பலியை சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் நிறைவேற்றுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டிமாதா பேராலய அதிபரும், துணை அதிபரும் செய்து வருகின்றனர்.



