தஞ்சாவூர், ஏப். 30 –
இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் காயம் அடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது.
திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினத்தை சேர்ந்த சேரன் (20) இவர் கடந்த 24ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 25ஆம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சேரன் முளை சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்குவது குறித்து டாக்டர்கள் அவரது பெற்றோர் செந்தில், ரேணுகா, சகோதரர் விஷாலிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர். மனிதநேய உணர்வுடன் அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக ஒப்புதல் அளித்தனர். அதன்படி சேரனின் கல்லீரல், சிறுகுடல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
இதில் ஒரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. மேலும் கண்கள் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
இந்த உடல் உறுப்புகள அனைத்தம் தஞ்சாவூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சேரனின் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பூவதி தலைமையில், அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சேரனின் குடும்பத்தினர் இந்த உயர்ந்த தியாகத்தின் மூலம் 7 நபர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இளம் வயதிலேயே உயிர் நிர்த்தாலும், உடல் உறுப்புகள் தானம் மூலம் பலரின் வாழ்வில் நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



