தஞ்சாவூர், ஜூலை 22 –
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புகையிலைப் பொருட்களை விற்ற பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 2வது முறையாக விற்றதை கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கடைக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலால் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை கூட்டாக இணைந்து தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் சுற்றியுள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் கோட்டை கலால் அலுவலர் பெர்சியா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சசிகுமார், விஜய் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வில் ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (ஹான்ஸ்)
விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வந்து கடையை பூட்டி சீல் வைத்தனர். இந்த கடையில் 2வது முறையாக புகையிலை பொருட்கள் பிடிபட்டுள்ளதால் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இது போன்ற செயல்களில் பெட்டிக்கடை வைத்திருப்போர் ஈடுபடக் கூடாது என்றும் மீறி செயல்பட்டு முதல் முறை பிடிபட்டால் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படுவதோடு 15 நாட்களுக்கு கடை போட்டி சீல் வைக்கப்படும். 2வது முறை பிடிபட்டால் 50,000 அபராதம் விதிக்கப்படுவதோடு 30 நாட்களுக்கு கடை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் 3வது முறை பிடிபட்டால் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 90 நாட்களுக்கு கடை பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


