தஞ்சாவூர், ஜூலை 30 –
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகத்தை கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தரும் பொதுமக்கள் தங்கள் பார்வையாளர்கள் தங்களது காத்திருப்பு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பயன்படுத்தும் நோக்கில் பார்வையாளர் கூடத்தில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் வழிகாட்டி நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள், வரலாறு, அறிவியல், சுய முன்னேற்றம் தொடர்பான நூல்கள் போன்ற பல்வேறு நூல்கள் பொதுமக்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டரை சந்திக்க வருகை தரும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கிய நூல்கள் மூலமாக இத்தகைய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ரேவதி கூறும்போது: கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் காத்திருக்கும் நேரத்தை வாசிப்பு நேரமாக மாற்றி, அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அறிவை பகிரும் சமூக பங்களிப்பையும் இந்த நூலகம் ஊக்குவிக்கும். இந்த நூலகம் தொடர்ந்து வளப்படுத்தப்பட்டு அனைவரும் பயனளிக்கும் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



