நாகர்கோவில், மே 11 –
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (44). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தோவாளை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (42) என்பவருக்கு மல்லிகை பூ கொடுத்துள்ளார். இதில் ரூ. 2000 பணம் கொடுக்க வேண்டி உள்ளது.
இந்த பணத்தை ஈஸ்வரமூர்த்தி கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி தனக்கு பணம் கொடுக்காமல் இருப்பது பற்றி மகேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஈஸ்வரமூர்த்தி பூ வாங்கினால் பணம் தரமாட்டான். கேட்டால் மிரட்டுவான் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ஈஸ்வரமூர்த்தி ஆத்திரமடைந்தார். தன்னை பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டது ஏன் என கேட்டுள்ளார். இதனால் இருவரும் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நேற்று ஈஸ்வரமூர்த்தி உட்பட 3 பேர் சேர்ந்து மகேஷை தாக்கி, கத்திரி கோலால் குத்தி உள்ளனர்.
இதில் மகேஷ் படுகாயம் அடைந்தார். சம்பவம் குறித்து மகேஷ் அளித்த புகார் பேரில் ஈஸ்வரமூர்த்தி அவரது மனைவி சகிலா உட்பட 3 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


