ராமநாதபுரம், ஜூன் 9 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் இன்று தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு நேரில் சென்று மீனவர்களை சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அமைச்சர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்ற அமைச்சர்கள், மீனவ பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மீன்பிடி துறைமுக வசதிகள், மீனவர் நலத்திட்டங்கள், கடல்சார் பாதுகாப்பு, இலங்கை கடற்படை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மீனவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், மீன்வளத்துறை அலுவலர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



