தருமபுரி, ஜூலை 15 –
தருமபுரியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியவளாகத்தில் உள்ள ஆவின் பால் பதனிடும் ஆலையை ஆட்சியர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, தரம், குளிரூட்டும் எந்திரங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு ஆவின்பால் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டுறிந்தார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் 245 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 36 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சாரா சரியாக நாள் ஒன்றிற்கு 1,51,520 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 8, 200 லிட்டர் பால் உள்ளூர் விற்பனைக்கு போக மீதம் 1,43,320 லிட்டர் பால் சென்னை மாநகர பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் ஆவின் பால் பாக்கெட், பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உப பொருட்கள் விற்பனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் மற்றும் ஊக்கத்தொகையை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு முறைப்படி வழங்க வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
\இந்த ஆய்வின் போது தருமபுரி ஆவின் பொது மேலாளர் மாலதி, பால் துணைப் பதிவாளர் பார்த்திபன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பால்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



