தக்கலை, ஜூன் 8 –
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மகன் ஷாய் (17). இவர் சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஷாய், அவரது தந்தை மற்றும் தாயுடன் வில்லுக்குறியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.
திருமணம் முடிந்த பிறகு மாலையில் பெண் வீட்டார் குலசேகரத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு சீதனப் பொருட்களோடு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவன் ஷாய் ஒரு உறவினருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து குலசேகரம் நோக்கி புறப்பட்டார்.
குமாரகோவில் சந்திப்பு பகுதியில் செல்லும் போது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வேகத்தை குறைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி காரின் பின்பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த ஷாய் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று ஷாய் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற உறவினர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.
இதையடுத்து தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



