தக்கலை, ஜூலை 13 –
தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் இன்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரின் அருகில் மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்கால் கரையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊர் சேர்ந்தவர்? என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தக்கலை அருகே உள்ள கேரளா புரம் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற பெண் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது மகனை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் புங்கரை அருகே வாய்க்கால்களில் பிணமாக கிடந்த வாலிபரின் புகைப்படத்தை அவரிடம் காண்பித்தனர். அப்போது இறந்தவர் தன்னுடைய மகன் என்று அவர் கூறியுள்ளார்.
இதை அடுத்து அவரை போலீசார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, சுஜினின் உடலை சரோஜினியிடம் காண்பித்து, இறந்தது தனது மகன் என்பதை உறுதி செய்தார். சுஜினுக்கு தற்போது 31 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தாயாருடன் வசித்து வந்திருந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சுஜின் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
அடுத்த நாள் காலையில் அவர் வந்து விடுவார் என்று தாயார் சரோஜினி நினைத்துள்ளார். ஆனால அடுத்த நாளும் அவர் வராததால், பல இடங்களில் தேடி இருக்கிறார். மகனை குறித்து எந்த தகவலும் கிடைக்காதால், சரோஜினி போலீஸ் நிலையத்தில் நேற்று சென்று புகார் கூறியிருக்கிறார். அப்போதுதான் வாய்க்கால் கரையில் இறந்து கிடந்தது சுஜின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதையில் வாய்க்கால் கரையில் மோட்டார் சைக்கிள் உடன் விழுந்திருக்கலாம் என்றும், இதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசாரால் கருதப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


