தக்கலை, ஆக. 3 –
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (60). பால் வியாபாரி. இவர் கடந்த மாதம் 18ந் தேதி மாலை 6 மணிக்கு குருவிக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு பைபையும் வைத்திருந்தார். அதில் ரூ.7 ஆயிரத்து 400 மற்றும் கை கடிகாரம் இருந்தது.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மனோன்மணியின் கையில் இருந்த செல்போனை பறித்ததோடு, பையையும் திருடிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதுகுறித்து மனோன்மணி தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், மோட்டார் சைக்கிளில் சென்று பால் வியாபாரியிடமிருந்து செல்போன் மற்றும் பணம், கை கடிகாரம் பறித்தவர்களில் ஒருவர் செறுகோல் பல்லூட்டுவிளை பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்பவரின் மகன் அபிஷேக் (21) என்பது தெரிய வந்தது. போலீஸ் தேடுவதை அறிந்த அவர் போலிசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவானார். இந்த நிலையில் அபிஷேக் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து வந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணம் திருடிய வழக்கில் தேடப்பட்ட நிலையில் அபிஷேக் ஒரு மாதத்திற்கும் மேலாக தலை மறைவானார். இதனால் இனி போலீசார் தேட மாட்டார்கள் என்ற நினைப்பில் தான் காதலித்த பெண்ணை 2 நாட்களுக்கு முன்பு துணிச்சலுடன் திருமணம் செய்துள்ளார். ஆனால் மணக்கோலம் கலைவதற்குள் போலீசார் மோப்பம் பிடித்ததால், தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர் மீது மார்த்தாண்டம், திருவட்டார் போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் அபிஷேக் மீது நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.



